27 ஜூலை, 2009

ராமசாமி அத்தியாயம் - 23


தேவதை கதைகள் "அலமேலு"


இந்த அத்தியாயம் எனக்கு தெரிந்த பெண்களின் கதைகளை சொல்ல போகிறேன்....


அன்று இரவு எனக்கொரு அழைப்பு வந்தது, தொலைபேசியில் தனக்கு அவசரமாக ஒரு உதவி வேண்டும் என்றார் கருணாமூர்த்தி, இவர் சிங்கப்பூர்காரர் தான் குடும்பத்தோடு ஆஸ்திரேலியாவுக்கு மாற்றலாகி போவதாகவும், அவசரத்திற்கு தன் வீட்டு பணிபென்னை கூட்டி செல்ல முடியவில்லை என்றும் அதனால் ஒரு மாதத்திற்கு எங்காவது தங்க வைக்க முடியுமா? என்றார். நாளை இரவுக்குள் ஏற்பாடு செய்கிறேன் என சொன்னேன், ஆனால் மறுநாள்வரை யாரும் தனக்கு பணிப்பெண் வேண்டாம், அதிலும் ஏதாவது பிரச்சினை வரும் என பயந்தனர்.


எனக்கு உடனே தனஞ்செய் நினைவுக்கு வந்தார், அவர் திருநெல்வேலியை சேர்ந்தவர், சிறுவயதில் தாயை இழந்தவர் சின்ன வயதில் இருந்தே விடுதியில் தங்கி படித்தவர், பின்னாளில் தந்தை மறுமணம் செய்துகொண்டது பிடிக்காமல், கல்லூரி படிப்பு முடிந்தவுடன், தன் நண்பன் மூலமாக சிங்கபூர் வந்து விட்டார், தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார், எனக்கு ஒரு நண்பர் மூலமாக அறிமுகமான அவர் மிகவும் நல்லவர், அவரிடம் எனக்கு பிடிக்காத ஒன்று வீட்டை குப்பை கூடமாக ஆக்கி வைத்திருப்பார். என்றாவது சனிக்கிழமை இரவுகளில் அவர் வீட்டுக்கு செல்வேன், அங்கு சென்று விடிய விடிய பீர் குடிப்போம். ஒருமுறை என்னிடம் சமைக்க தெரிந்த பையன் இருந்தால் சொல்லுங்கள் என்னுடன் தங்கிகொள்ளட்டும், வாடகை எதுவும் தரவேண்டாம், சமைத்துவைத்த்தால் போதும், வீட்டை கொஞ்சம் சுத்தபடுத்தினால் போதும், கொஞ்சம் சிரமபடுகிற வேலை அனுமதியில் வந்திருக்கும் பையனை அனுப்பி வையுங்கள் என்றார். அவர் சொல்லி மூன்று மாதங்கள் இருக்கும், இருந்தாலும் கேட்டு பார்க்கலாமே என அன்று இரவு தொலைபேசியில் பிடித்தேன்.


அவரோ நான் பையன்தான் கேட்டேன் பெண் என்றால் வேண்டாம் என்றார். நான் பிடிவாதமாக அது வயதான பெண்மணி, ஒரு மாதத்திற்கு மட்டும் இருந்தால் போதும் , இல்லை தற்சமயத்துக்கு மட்டும் உங்கள் வீட்டில் இருக்கட்டும், வேறொரு வீடு கிடைத்தால் நான் அங்கு அனுப்பிவிடுகிறேன், கொஞ்சம் உதவி பண்ணுங்க என்றேன். அரைமனதாக சரி என்றார்.
மறுநாள் கருனாமூர்த்தியிடம் நண்பர் தனஞ்செய் உங்கள் வீட்டிற்கு வந்து அழைத்து போவார் என்றேன். அவரும் நாளை மாலை வரசொல்லுங்கள், நாங்கள் நாளை இரவுதான் கிளம்புகிறோம், அவரும் வந்தால் அப்போதே அழைத்து போகட்டும் என்றார்.


மறுநாள் இரவு மீண்டும் கருணாமூர்த்தி பேசினார், என்ன தம்பி இப்படி பண்ணிட்டிங்க என்றார் கோபமாக, என்னன்னே ஆச்சு அவர் வரலியா? என்றேன். இல்ல தம்பி அவர் வந்துட்டார், ரொம்ப சின்ன பையனா இருக்கார், அதுவும் அவர் மட்டும்தான் தனியாக இருக்காராம்! அவர நம்பி எப்படி அனுப்ப முடியும் என்றார். நானோ அண்ணே, இப்போதைக்கு இரண்டு நாளைக்கு இருக்கட்டும், அதன்பிறகு வேறு வீடு பார்த்து அனுப்பி வைக்கிறேன், மேலும் தனஞ்செய் மிகவும் நல்லபைய்யன் அவரை நம்பி அனுப்புங்கள் என்றேன்
அதற்குள் தம்பி அவர் உங்ககிட்டே பேசனுமாம் என்று தொலைபேசியை அவரிடம் கொடுத்தார். தனன்ஜெய்யும் என்னங்க நீங்க வயசானவங்கன்னு சொன்னீங்க, ஆனா சின்ன பொண்ணா இருக்கு, என்னால கூட்டிட்டு போக முடியாதுங்க என்றார். எனக்கோ குரங்கு அசைத்த ஆப்பின் கதைதான் நினைவுக்கு வந்தது, என்னடா உதவி செய்யபோய் கெட்டபேர் ஆகிவிட்டதே எப்படியாவது இத்தனை சரி செய்ய வேண்டுமே என தனன்ஜெய்யிடம், மன்னிச்சுகங்க நண்பா அவங்க பேரு "அலமேலு"ன்னு சொன்னதும் வயசானவங்களா இருக்கும்ன்னு நம்பிட்டேன், தயவு செஞ்சு நாளை மாலை வரை உங்கள் வீட்டில் இருக்கட்டும் அதன்பிறகு நிச்சயம் மாற்று ஏற்பாடு செய்கிறேன் என உறுதி அளித்தேன்.


அதன்பிறகு விமான நிலையம் சென்று அங்கிருந்து கருணாமூர்த்தி தம்பி உங்கள நம்பித்தான் போறேன். அது சின்னபொன்னு ரொம்ப பாவம் ஒரு பிரச்சினையும் வராம பாத்துக்கணும் என்றார். தனன்ஜெயோ வீட்டிற்கு சென்றவுடன் நண்பா உங்களுக்காதான் அழைச்சிகிட்டு வந்தேன், நாளை மாலை வந்து கூட்டி போய்விடுங்கள், இல்லன்ன அவங்கள வெளில அனுப்பிவிடுவேன், அப்புறம் வருத்தபடாதீங்க என டொக்கென தொலைபேசியை வைத்தார்.


எனக்கோ வடிவேலு மாதிரி ஆகிட்டோமே, உனக்கு வேணுண்டா... இனிமே யாரவது உதவின்னு கேட்டா பண்ணுவியா என என்னையே திட்டிகொண்டேன், அன்று இரவு எனக்கு தூக்கமற்று கழிந்தது. மறுநாள் வேலைக்கு போகவில்லை, அந்த பெண்ணிற்கு ஏதாவது வழி பன்னவேண்டுமே.. முகமறியாத அந்த பெண்ணிற்க்காக நான் அன்று அவ்வளவு அலைந்தேன்.


மாலைவரை ஒருவரும் வேண்டாம் என சொல்லிவிட்டனர், எப்படியாவது தனன்ஜெய்யிடம் சொல்லி இன்னொரு நாள் கேட்க்கவேண்டும் என முடிவு செய்தேன். அன்று இரவு எட்டுமணி வாக்கில் தனன்ஜெயிடம் இருந்து அழைப்பு வந்தது, என்ன சொல்வாரோ என கலவரமாகவே வணக்கங்க எப்படி இருக்கீங்க என்றேன், அவரோ உங்களால் மட்டும்தான் இப்படியெல்லாம் பேச முடியுது, ஏன் வரலை என்றார்? மன்னிச்சுகங்க இன்னைக்கு வேலை அதிகம் எனவே நாளை மாலை நிச்சயம் வந்துவிடுகிறேன் என்றேன். அவரோ பரவயில்லைங்க அவங்க இங்கேயே ஒரு மாதம் இருக்கட்டும், அத சொல்லத்தான் கூப்பிட்டேன் என்றார், எனக்கோ அப்பாடா என்றிருந்து ஆவலை அடக்கமுடியாமல் என்ன ஆச்சுங்க எதனால அப்படி ஒரு முடிவு எடுத்தீங்க என்றேன்.


அவரோ நான் வீட்டுக்கு வந்து பார்த்தா, வீடு மாறி வந்திட்டோம்ன்னு நெனெச்சேன், ஒரு நாளைக்குள்ள ஏன் வீட்டை தலைகீழ மாத்திட்டாங்க, வீடே இப்பதான் பார்க்கிற மாதிரி இருக்கு, சமைச்சு வேற வச்சுருக்காங்க.. சரி இங்கேயே இருக்கட்டும்ன்னு முடிவு செய்தேன், எதற்கும் அவங்களிடம் இங்க இருப்பதில் சங்கடம் இருக்கன்னு கேட்டு சொல்லுங்க என தொலைபேசியை அந்த பெண்ணிடம் கொடுத்தார். அந்த பெண்ணும் நீங்க சொன்னா இருக்கிறேன் என்றது, நானும் பிரச்சினை தீர்ந்ததே என்ற சந்தோசத்தில் நீ அங்கேயே இரும்மா, நான் வரும் சனிக்கிழமை பார்க்கிறேன் என சொன்னேன்.


அன்று எனக்கு தெரிந்தவில்லை நான் அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக இருந்திருக்கிறேன் என்று. அதனை அடுத்தவாரம் சொல்கிறேன்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி
இணைய இதழில் தொடராக வருகிறது ........

கருத்துகள் இல்லை: